ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் மற்றொரு சுகாதார அவசர நிலையை அறிவிப்பது குறித்து அந்நாடு ஆராய்ந்து வருகிறது.
அவசர நிலையை அறிவிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக ஜப்பான் கொரோனா கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் யசுதோஷி நிஷிமுரா நேற்று சனிக்கிழமை தெரிவித்தார்.
டோக்கியோ மற்றும் அதனை அண்டிய மாகாணங்களில் தொற்று நோய் மீண்டும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் டோக்கியோவின் ஆளுநர் மற்றும் டோக்கியோவின் அண்டை மாகாணங்களிடம் இருந்து சுகாதார அவசர நிலை அறிவிப்பு தொடர்பான கோரிக்கைகள் வலுவடைந்துவருகின்றன.
இதனையடுத்தே அவசர நிலையை அறிவிப்பது குறித்து ஆராய்வதாக அமைச்சர் யசுதோஷி நிஷிமுரா தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஆளுநர் யூரிகோ கொய்கே மற்றும் கனகாவா மாகாண அரச தலைவர்களுடன் நேற்று இதுகுறித்து நிஷிமுரா ஆராய்ந்தார்.
இதன் பின்னர் கருத்து வெளியிட்ட அவர், அவசர நிலையை அறிவிக்கவேண்டிய கடுமையான சுழலில் நாங்கள் இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுப்பதற்கு முன் சுகதார துறை சார் நிபுணர்களின் கருத்துக்களை நாங்கள் கேட்போம் எனவும் அவர் கூறினார்.
ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. எனினும் ஆளுநர்களின் கோரிக்கை மற்றும் கொரோனா தொற்று நோயின் தற்போதைய நிலை குறித்து சுகதார அமைச்சு அதிகாரிகள் பிரதமரை அவரது அலுவலகத்தில் சந்தித்து விளக்கினர்.
டோக்கியோ, ஒசாகா உள்ளிட்ட நாட்டின் 47 மாகாணங்களில் கடந்த ஏப்ரல் மாதம் ஜப்பான் மத்திய அரசு சுகாதார அவசரகால நிலையை அறிவித்தது. பின்னர் அவசர நிலை நாடு முழுவதும் நீடிக்கப்பட்டது.
மே மாத இறுதியில் அவசரகால நிலை முழுமையாக நீக்கப்பட்டது.
டோக்கியோவில் நேற்று சனிக்கிழமையன்று 814 புதிய கொரோனா தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். நாடு முழுவதும் 3,059 தொற்று நோயாளர்கள் பதிவாகினர்.
நேற்று பதிவான புதிய தொற்று நோயாளர்களுடன் ஜப்பானில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 61,774 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.